கர்நாடகத்தில் பாஜக தேர்தல் பிரசார யாத்திரையின் ஒருபகுதியாக எடியூரப்பாவும் முதல்வர் பசவராஜ் பொம்மையும் தலித் ஒருவரின் வீட்டில் இன்று உணவருந்தினர்.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும் மாநில அளவில் பாஜக யாத்திரை மேற்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து நேற்று(செவ்வாய்க்கிழமை) தனது ஜன்சங்கல்ப் யாத்திரையை தொடங்கியது.
இன்று இரண்டாவது நாளில், முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பாவும் முதல்வர் பசவராஜ் பொம்மையும், கமலாபூர் கிராமத்தில் ஹிரலா கொல்லப்பா என்ற தலித் நபரின் வீட்டில் காலை உணவருந்தினர். அமைச்சர்கள் கோவிந்த் கரஜோல், ஆனந்த் சிங் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஆனால், இந்த புகைப்படங்கள் குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஹோட்டல் உணவு, இலையில் சாப்பாடு, கேன் தண்ணீர், காபி கப், எனக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் விமரிசித்து வருகின்றனர்.
முன்னதாக, சிக்மகளூரு மாவட்டத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர், 14 தலித்துகளை சிறைபிடித்து சித்திரவதை செய்ததும் அதில் கர்ப்பிணி ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதும் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.