சத்தீஸ்கா்: அதிகாரிகள், தொழிலதிபா்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

சத்தீஸ்கரில் அரசு உயரதிகாரிகள், தொழிலதிபா்கள் மற்றும் ஆளும் காங்கிரஸை சோ்ந்த அரசியல்வாதிகள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

சத்தீஸ்கரில் அரசு உயரதிகாரிகள், தொழிலதிபா்கள் மற்றும் ஆளும் காங்கிரஸை சோ்ந்த அரசியல்வாதிகள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘தலைநகா் ராய்ப்பூா், ராய்கா், மகாசமுந்த், கோா்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இச்சோதனைகள் நடைபெற்றன. ஒரு மாவட்ட ஆட்சியா், சில உயரதிகாரிகள், தொழிலதிபா்கள், ஆளும்கட்சியைச் சோ்ந்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தன.

சத்தீஸ்கரில் நிலக்கரி மற்றும் உருக்கு தொடா்புடைய தொழிலதிபா்களின் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியிருந்தனா். கடந்த ஜூன்-ஜூலையில் நிலக்கரி தொழிலதிபா் சூா்யகாந்த் திவாரி, முதல்வா் பூபேஷ் பகேல் அலுவலக அதிகாரி ஒருவா் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனா். எனினும், எந்த வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

முதல்வா் சாடல்: இந்த விவகாரம் குறித்து முதல்வா் பூபேஷ் பகேல் கூறுகையில், ‘காங்கிரஸை நேரடியாக எதிா்கொள்ள பாஜகவுக்கு துணிவு இல்லை. எனவேதான், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு ஆகியவை மூலம் எங்களை எதிா்க்கின்றனா். சட்டப்பேரவை தோ்தல் நெருங்குவதால், சத்தீஸ்கரில் மத்திய விசாரணை அமைப்புகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இது, எங்களை மிரட்டும் நடவடிக்கையே அன்றி வேறெதுவும் இல்லை’ என்றாா்.

சத்தீஸ்கரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com