கர்நாடகத்தில் கோயிலுக்குள் நுழைய விடாமல் தலித் இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துமகுரு மாவட்டம் குப்பி தாலுகாவின் நிட்டூர் கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் இன்று காலை வெளிச்சத்துக்கு வந்தது.
முல்கத்தம்மா கோயிலில் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.
நிட்டூரைச் சேர்ந்த அனில் ராஜ் என்ற தலித் இளைஞர், முல்கத்தம்மா கோயிலில் உள்ள சுவாமிக்கு பூஜை செய்ய பூ, தேங்காய், தூபவத்திகளுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஆனால் பூசாரி அவரை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி, அவர் கொண்டுவந்த காணிக்கைகளை எடுக்கவும் மறுத்து, அவரை கோயிலுக்கு வெளியே தள்ளியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.