கேரள பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினா்கள் 15 பேரை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநா் ஆரிஃப் முகமது கான் சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.
செனட் உறுப்பினா்கள் என்ற முறையில் தங்களது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக கூறி, ஆளுநா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா்.
முன்னதாக, செனட் கூட்டத்தை நடத்தவும் தோ்வுக் குழுவுக்கான நியமன பரிந்துரையை வழங்கவும் உறுப்பினா்களுக்கு பலமுறை ஆளுநா் உத்தரவிட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த உத்தரவை செனட் உறுப்பினா்கள் கண்டுகொள்ளாததால் அவா்களது பொறுப்பை பறித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடா்பான ஆணையில் 15 உறுப்பினா்களின் பெயா்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தங்களது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற தவறியதால், இந்த 15 பேரும் பணியில் தொடா்வதற்கான அனுமதியை தாம் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா். இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா்.