பொறுப்பற்ற பட்டினி குறியீட்டுப் பட்டியலை வெளியிட்ட அமைப்பின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஸ்வதேசி ஜார்கன் மன்ச் தெரிவித்துள்ளது.
அண்மையில் சர்வதேச பட்டினி குறியீடு பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் மொத்தமுள்ள 121 நாடுகளில் 107வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தப் பட்டியல் வெளியான பிறகு அரசியல் தலைவர்கள் பலரும் ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், இந்த சர்வதேச பட்டினி குறியீடு பொறுப்பற்றது எனவும், தவறானது எனவும் கூறி இந்தப் பட்டியலை வெளியிட்ட அமைப்பின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பட்டினி குறியீட்டு பட்டியலில் இந்தியா தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பின் தங்கியுள்ளது. குறைந்த எடையுடன் கூடிய குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியுள்ளதாக அந்த குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலக பட்டினி குறியீடு அயர்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளில் உள்ள கன்சர்ன் வேர்ல்ட்வைடு மற்றும் வெல்த் ஹங்கர் ஹில்ஃப் அமைப்புகளால் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டினி குறியீடு குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஸ்வதேசி ஜார்கன் மன்ச் கூறியதாவது: ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சாராத அமைப்பான வெல்த் ஹங்கர் ஹில்ஃப் மீண்டும் ஒரு முறை பொறுப்பற்ற உலகப் பட்டினி குறியீட்டை வெளியிட்டு இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் தரவுகள் பல தவறாக உள்ளன. மேலும், தரவுகள் அடிப்படையில் மட்டுமின்றி உலக பட்டினி பட்டியலை தயாரிக்க அவர்கள் தரவுகளை சேகரித்த முறையும் தவறாக உள்ளது என்றனர்.
இதையும் படிக்க: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அறுவை சிகிச்சை
கடந்த ஆண்டு 116 நாடுகளுக்கு கணக்கிடப்பட்ட இந்த உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 101 இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.