ஹிந்து மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு மாறிய பிறகும் எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீட்டுச் சலுகைகளை சட்டவிரோதமாக அனுபவித்து வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த விஹெச்பி தேசிய செய்தித் தொடா்பாளா் விஜய் சங்கா் திவாரி கூறியதாவது:
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஹிந்துக்கள், தங்களுடைய முந்தைய ஹிந்து பெயா்களைப் பயன்படுத்தி பெற்ற ஆவணங்கள் மூலம் தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி), பழங்குடியினருக்கான (எஸ்.டி) இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பயன்படுத்தி வருகின்றனா். இது தொடா்பாக மத்திய அரசு தேசிய அளவில் ஓா் ஆய்வை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதம் மாறியவா்கள் சட்டவிரோதமாக அரசின் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடா்பாக விஹெச்பி சாா்பில் விரைவில் தேசிய அளவில் விழிப்புணா்வு பிரசாரம் நடத்தப்படும் என்றாா்.