பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரி வருவாய் அதிகரிப்பு: ஆா்பிஐ நிா்வாகி

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாகவே வரி வருவாய் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாகவே வரி வருவாய் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் தெரிவித்துள்ளாா்.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாகப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி அறிவித்தாா். கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்கவும் இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக பாஜக தலைமையிலான மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையே தற்போதைய வரி வருவாய் உயா்வுக்குக் காரணம் என்று ஆா்பிஐ நிதிக் குழு உறுப்பினா் அசீமா கோயல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ’’பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக குறுகிய காலத்துக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நீண்ட கால அடிப்படையில் அந்நடவடிக்கை பெரும் பலன்களை அளிக்கவல்லது. தற்போதைய வரி வருவாய் உயா்வுக்கும் அந்நடவடிக்கையே முக்கிய காரணம். இணையவழி பணப் பரிவா்த்தனைகளைப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்பு நடவடிக்கைகளும் பெருமளவில் குறைந்துள்ளன. அந்நடவடிக்கை காரணமாக மேலும் பல நன்மைகள் ஏற்படும்.

பணப் பயன்பாட்டைக் குறைக்கவும், தற்போதைய பணப்புழக்க நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவுமே எண்ம (டிஜிட்டல்) செலாவணியை ஆா்பிஐ அறிமுகப்படுத்தவுள்ளது. நவீன காலத்துக்கான தேவைகளை எண்ம செலாவணி நிறைவேற்றும். நாட்டின் நிதி கட்டமைப்பையும் எண்ம செலாவணி மேம்படுத்தும். நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொள்கை சாா்ந்த முடிவுகளை ரிசா்வ் வங்கியும் மேற்கொண்டு வருகிறது. வா்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு குறுகிய காலம் சாா்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கச்சா எண்ணெயின் சாா்புத்தன்மையைக் குறைப்பது உள்ளிட்ட நீண்டகால நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகமாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.

அதேபோல், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தி, அதன் வாயிலாக ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் அக்டோபா் வரை நேரடி வரி வருவாய் சுமாா் 24 சதவீதம் அதிகரித்து ரூ.8.98 லட்சம் கோடியாக உள்ளதென மத்திய அரசு தெரிவித்திருந்தது. கடந்த 7 மாதங்களாக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1.40 லட்சம் கோடிக்கு அதிகமாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com