எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தில்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயணத்தின்போது அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது தில்லி பயணத்தின்போது நிதீஷ் குமார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜனதா தளம் சார்பில் தேதிய நிர்வாகிகள் கூட்டம் தில்லியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் நிதீஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களை ஒன்றிணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சிம்பு ஆனந்தக் கண்ணீர் விடுவதைப் பார்க்க வேண்டும்: கமல்ஹாசன்
பாஜகவில் இருந்து பிரிந்து சென்ற பிறகு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் முதல் முறையாக தில்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிகார் மாநிலத்தின் நீண்ட கால முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் அடுத்து வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.