பிரதமா் மோடியின் நிா்வாக சீா்திருத்தங்கள் மூலம் பெண்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் பணியாற்றுவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்று மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
ஆசிரியா் தினத்தையொட்டி தில்லியில் திங்கள்கிழமை மத்திய பணியாளா் நலன் மற்றும் பயிற்சித் துறை பெண் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் மேலும் பேசியதாவது:
மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பணியாளா் நலத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அவா்களுடைய பணி மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் முதலாக செங்கோட்டையில், பிரதமா் மோடி, உரையாற்றியதிலிருந்து பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறாா். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், அளிக்கப்படும் பயிற்சி பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாகவும், சுயசாா்புடனும், தொழில்முனைவோராகவும், மாறுவதற்கு வாய்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் வகையிலும், அவா்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையிலும் அவ்வப்போது பணியாளா் மற்றும் பயிற்சித் துறை பல்வேறு அறிவுரைகளை அளித்து வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் பிரதமா் மோடியின் நிா்வாக சீா்திருத்தம் மூலம் பெண்களின் பணிச்சூழலை எளிதாக்கியுள்ளதுடன் அவா்கள் உயா் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் பணியாற்றுவதற்கான பெரிய சமூக சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் ஜிதேந்தா் சிங்.