அசாமில் இருவேறு இடங்களில் 1,100 மற்றும் 860 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அசாம்-திரிபுரா எல்லையில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு குவஹாத்தியை நோக்கி வந்த லாரியை மடக்கி காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரியின் ரகசிய அறையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணீஷ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க- தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி
இதுகுறித்து சுரைபாரி காவல் நிலையத்தின் காவல் அதிகாரி நிரஞ்சன் தாஸ் கூறுகையில், அகர்தலாவில் இருந்து திரிபுரா நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது, சுரைபாரி என்ற இடத்தில் லாரியை மறித்தோம். சோதனையின் போது, லாரியின் ரகசிய அறையில் இருந்து 1108 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். லாரியின் ஓட்டுநரையும் கைது செய்துள்ளோம் என்றார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோல் அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து நடத்திய சோதனையில் லாரி ஒன்றில் இருந்து 860 கிலோ கஞ்சா மற்றும் 40.70 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.