பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் வழங்கிய 1,000-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருள்களுக்கான ஏலம் வரும் 17 ஆம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பரிசுகள், நினைவுப் பரிசுகள் ஆகியவற்றை அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே 3 முறை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், 4 ஆவது முறையாக pmmementos.gov.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் 17 ஆம் தேதி ஏலம் தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏலத்தில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இடம் பெறுகின்றன. இம்முறை விளையாட்டு மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களின் விலை உயர்ந்த பரிசுகளும் ஏலத்தில் இடம் பெறுகின்றன.
1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருள்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும்.
இதையும் படிக்க | நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி ?
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் மற்றும் பரிசுகளின் சிறப்புக் கண்காட்சி புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பரிசுகளாகப் பெறப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட பொருள்களின் தொகுப்பைக் காட்சிப்படுத்துவது ஒரு மரியாதை, இது இப்போது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து பரிசுப் பொருட்களும் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. மேலும், இந்த வரலாற்று சிறப்புமிக்க பரிசுப் பொருள்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து வாங்கிச் செல்லலாம்.
ஏலத்தில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பரிசளித்த ராணி கமலாபதி சிலை, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசளித்த அனுமன் சிலை மற்றும் சூரிய ஓவியம், மற்றும் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் பரிசளித்த திரிசூலம் ஆகியவை அடங்கும்.
ஏலம் விடப்படவுள்ள பொருள்களில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பரிசளித்தது கோல்ஹாபூரில் அமைந்துள்ள மகாலட்சுமி தேவியின் சிலை மற்றும் ஆந்திரம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பரிசளித்த வெங்கடேசப் பெருமானின் படம் ஆகியவை அடங்கும்.
மேலும், பிரதமர் மோடி திறந்துவைத்த இந்தியா கேட்டில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிறப்பு முன்மாதிரி சிலையும் ஆரம்ப விலையாக ரூ.5 லட்சத்தில் ஏலம் விடப்படும்.
ஜனவரி 2019 இல் பிரதமர் அலுவலகத்தால் முதல் ஆன்லைன் ஏலம் தொடங்கப்பட்டது. கடந்த காலத்தைப் போலவே, ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி, மத்திய அரசின் முக்கிய திட்டத்திற்கும், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தப்படும்.