சுயசார்பு இந்தியா இயக்கத்தின் வெற்றியில் மகளிர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என மோடி கூறினார்.
மத்தியப்பிரதேச மாநிலம் ஷியோபூரில் உள்ள கர்ஹல் என்ற இடத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, எனது பிறந்த நாளான இன்று வழக்கமாக எனது தாய் ஹீராபென் மோடியை சந்திக்க செல்வேன். அப்போது அவரது பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வேன். ஆனால், லட்சக்கணக்கான மத்தியப்பிரதேச தாய்மார்களை சந்திக்கிறேன். அவர்கள் என்னை ஆசிர்வதிக்கிறார்கள் என்று கூறினார்.
“கடந்த நூற்றாண்டிற்கும் இந்த நூற்றாண்டிற்கும் இடையில், நாட்டில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளது. கிராம உள்ளாட்சி அமைப்புகள் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை பெண்கள் தான் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர் ” என்று கூறினார்.
"கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க பல புதிய வாய்ப்புகளை உருவாக்க நமது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
'ஒரே மாவட்டம், ஒரு தயாரிப்பு' மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளூர் பொருள்களை பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய சந்தையை உருவாக்கவும் முயற்சித்து வருகிறோம்.
கடந்த 8 ஆண்டுகளாக சுயஉதவிக் குழுக்களுக்கு மேம்படுத்துவதற்கு ஆதரவாக பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். நாடு முழுவதும் 8 கோடிக்கும் அதிகமான மகளிர் இந்த குழுக்களில் இணைந்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு சகோதரியாவது இந்த குழுவில் இணைந்திருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று மோடி கூறினார்.