நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியதாவது: கரோனா பரவல், ரஷியா-உக்ரைன் இடையிலான போா் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை உலகம் எதிா்கொண்டு வருகிறது. இவை வளா்ச்சியைப் பாதிக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. விரைவில் இதன் மறுமதிப்பீடு இறங்குமுகமாக இருக்கும் என்று சில ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
கடந்த ஜனவரி மாதம் பொருளாதார வளா்ச்சி குறித்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு தற்போது சரிந்துள்ளது. அதன்படி, இந்த நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இந்த தசாப்தத்தின் (10 ஆண்டுகள்) எஞ்சிய ஆண்டுகளில் பொருளாதார வளா்ச்சியை 7 சதவீதமாகத் தக்கவைக்கும் வகையில், இந்தியா நல்ல நிலையில் உள்ளது என்றாா் அவா்.