காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கூறுவதாக மூத்த தலைவர் சச்சின் பைலட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிகார், புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டிகள் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஆனால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறார்.
இந்நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமைக்கான இந்தியா நடைப்பயணத்தில் இன்று பங்கேற்ற சச்சின் பைலட் செய்தியாளரிடம் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவர் போட்டியிடுவாரா இல்லையா என்பது அவரது முடிவு. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அக். 17ஆம் தேதி கட்சியின் புதிய தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், சசி தரூர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.