பி.எம். கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிவாரண உதவிகளை அளிப்பதற்காக பி.எம்.கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டு பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் நிதி அளித்து வருகின்றனர். மேலும் இந்த நிதி கரோனா சிகிச்சைகள், நிவாரணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அறங்காவலர்கள் குழுவில் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் தலைவர் கரிய முண்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி, டீச் ஃபார் இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனந்த் ஷா ஆகியோர் இதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பி.எம்.கேர்ஸ் நிதி அமைப்பின் அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் ஆகியோருடன் புதிய அறங்காவலர்களும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன்... எதை முதலில் பயன்படுத்த வேண்டும்?