தில்லியில் அனைத்து மாநில பாஜக பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை இன்று (செப்.27) ஆலோசனை மேற்கொண்டார்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டியும் பல்வேறு மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டியும் பாஜக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த ஜெ.பி.நட்டா, தமிழக பாஜக ஓபிசி, எஸ்சி பிரிவினரை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து கேரள மாநில பாஜக நிர்வாகிகளையும், திருவனந்தபுரத்தின் கிறிஸ்தவர்களின் வாக்குகளைக் கவரும் வகையில், கத்தோலிக்க பேராயர்களையும் சந்தித்துப் பேசினார்.
அடுத்து வரும் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குகளைக் கவரும் வகையிலும், தென்னிந்தியாவில் வலுவான இடத்தைப் பிடிக்கும் வகையிலும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தில்லியில் அனைத்து மாநில பாஜக பொறுப்பாளர்களை ஜெ.பி.நட்டா நேரில் சந்தித்துப் பேசினார். இதில் தேர்தலை இலக்காக வைத்து கட்சி மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.