பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஆங்கிலேயா் காலத்தில் இயற்றப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867-க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா குறித்து பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், ‘பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கு நடைமுறையிலிருந்த சட்டத்தில் எட்டு படிநிலைகள் இருந்தன. தற்போது அந்த முறை ஒற்றைப் படிநிலையாக மாற்றப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் பதிவுக்காக 2-3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்த நிலையில், தற்போது 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பத்திரிகைகள் பதிவு செய்யும் முறை எளிமையாகி உள்ளது’ என்றாா்.