புதுதில்லி: பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான (கியூட்) இளங்களை இரண்டாம் பதிப்புக்கான விண்ணப்ப செயல்முறை இன்று இரவு முதல் தொடங்கி மார்ச் 12 வரை நடைபெறும் என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். மே 21 முதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான கியூட் தேர்வு விண்ணப்பப் படிவ விநியோகம் இன்றிரவு முதல் இணைய வழியில் தொடங்கும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மாணவர்கள் என்.டி.ஏ. இணையதளத்திலிருந்து அட்மிட் கார்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அது 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படாது என்றும் அறிவித்தது.
அதே வேளையில் பல்கலைக்கழகங்களில் இளங்கலை சேர்க்கை செயல்முறை ஜூலை 2023க்குள் முடிக்கப்பட்டு புதிய கல்வி அமர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்றார்.
விண்ணப்பதாரர்கள் 2023ல் நடைபெறும் இளங்களை கியூட் தேர்வுக்கு https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 கியூட் இளங்களைத் தேர்வு 13 மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படும் என்றார்.