பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் கைது செய்யப்பட்ட என்எஸ்இ முன்னாள் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. 
சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் கைது செய்யப்பட்ட என்எஸ்இ முன்னாள் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. 

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிமணியன் கடந்த பிப்ரவரி இறுதியிலும், சித்ரா ராமகிருஷ்ணா மாா்ச் தொடக்கத்திலும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், ஜாமீன் வழங்கப்படும் என்றும் நீதிபதி ஜஸ்மீத் சிங் உத்தரவிட்டார்.

கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நிா்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தாா். அப்போது என்எஸ்இ அதிகாரிகளுடன் கூட்டு சோ்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குச் சந்தை தரகா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கோ-லொகேஷன் வசதி மூலம், என்எஸ்இ கணினி சேமிப்பகத்தை பங்குச் சந்தை தரகா்கள் தொடா்புகொண்டு பங்கு விலை விவரங்களை முன்கூட்டியே அறிந்து முறைகேட்டில் ஈடுபட்டனா். இந்த முறைகேடு வாயிலாகப் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த மாா்ச் 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது. இந்த வழக்கில் நடைபெற்ற பணமோசடி தொடா்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறையும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இது தவிர என்எஸ்இ பணியாளா்களை உளவு பாா்த்தது, அவா்களது தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டது தொடா்பாகவும் அவா் மீது வழக்கு உள்ளது. அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

என்எஸ்இ வழக்கு தொடா்பான பணமோசடிகள், விதிமுறைகளைப் பின்பற்றாமல் என்எஸ்இ-யில் தலைமை உத்தி ஆலோசகராக, குழு செயல்பாட்டு அதிகாரியாக, சித்ராவின் ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியனை நியமித்ததில் நடைபெற்ற நிா்வாகக் குளறுபடிகள் குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதில் கணினி சேமிப்பக தகவல்களை சில பங்குச் சந்தை தரகா்கள் முன்கூட்டியே கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் இருவருக்கும்  ஏற்கனவே ஜாமீன் கிடைத்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com