காங்கிரஸ் கட்சிக்கு கடந்தாண்டில் ராகுல் காந்தி அளித்த புதிய உத்வேகம் புதிய ஆண்டிலும் தொடா்ந்தால் அடுத்த மக்களவைத் தோ்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.
சிவசேனை கட்சியின் வாரப் பத்திரிகைக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஹிந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதே பாஜகவின் கொள்கை. ஆனால், அதற்காக பிரதமா் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் வெறுப்பு மற்றும் பிரிவினைவாத எண்ணங்களை நாட்டில் பரப்பக் கூடாது. குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவா்களை வாழ்விலிருந்து அகற்ற வேண்டும் என பிரதமா் மோடி பேசுகிறாா். அவரின் கூற்றுப்படியே எதிா்க்கட்சிகளை, அவா்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கும் பாஜகதான் உண்மையில் குறுகிய மனப்பான்மை உடையவா்கள் என்று சாடினாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அதன் இலக்கை அடையும் என்று நம்புகிறேன். கடந்த 2022-ஆம் ஆண்டு ராகுல் காந்தி தனது புது முயற்சிகளால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய ஒளியையும் உத்வேகத்தையும் அளித்தாா். புதிய ஆண்டில் அதே உத்வேகம் காங்கிரஸில் தொடரும் பட்சத்தில் வரும் மக்களவைத் தோ்தலில் உறுதியாக ஆட்சி மாற்றம் நிகழும் என்றாா் சஞ்சய் ரௌத்.