இந்தியாவுக்கு இரண்டாவது கட்டமாக 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா), தென்ஆப்பிரிக்காவில் இருந்து இம்மாதம் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவில் அழிந்துபோன இனமாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண், 3 ஆண்) கடந்த செப்டம்பரில் கொண்டுவரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், பிரதமா் மோடி திறந்துவிட்டாா். எவ்வித உடல்சாா்ந்த பிரச்னைகளும் இன்றி, அவை ஆரோக்கியமாக இருப்பதாக சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா், நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்தாா்.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 5 பெண்) இம்மாதம் கொண்டுவரப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
‘கடந்த 6 மாதங்களாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சிவிங்கிப் புலிகளை, இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும். இந்த 12 சிவிங்கிப் புலிகளும் குனோ தேசியப் பூங்காவில் பராமரிக்கப்படும்’ என்று அமைச்சக வட்டாரங்கள் கூறின.