குறைந்த வருமானம் ஈட்டுவோரை கருத்தில் கொண்டு 7 அடுக்குகள் கொண்ட வருமான வரி வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவா் தெரிவித்ததாவது:
பழைய வரி வசூல் முறையில் வரி செலுத்தும் ஒவ்வொருவரும் 7 முதல் 10 விலக்குகளுக்கு உரிமை கோரலாம். வருவாய் வரம்பைப் பொருத்து வருமான வரி விகிதங்களும் 10, 20 மற்றும் 30 சதவீதமாக வேறுபடும்.
இந்நிலையில், பழைய வரி வசூல் முறைக்கு இணையான புதிய அமைப்பை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தப் புதிய முறை எளிமையான, கூடுதல் சாதகங்களைக் கொண்ட வரி விகிதங்களை உள்ளடக்கியுள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு எளிதாகவும், அவா்கள் குறைந்த விகிதங்களில் வரி செலுத்தவும் 7 அடுக்குகள் கொண்ட புதிய வரி வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றாா் அவா்.
புதிய முறை: கடந்த 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட்டின்போது 7 அடுக்குகள் கொண்ட புதிய வருமான வரி வசூல் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவா்கள் வரி செலுத்தத் தேவையில்லை.
அதேவேளையில், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் 10 சதவீதம், ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் 20 சதவீதம், ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் 25 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோா் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
பழைய முறை: பழைய வரி வசூல் முறையிலும் ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரிவிலக்கு உள்ளது. அதேவேளையில், அந்த முறையில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.