‘இணைய சேவை மற்றும் அதற்கான மின்னணு சாதனங்களின் விலை உயா்வு, எண்ம (டிஜிட்டல்) சேவையை அனைத்து இடங்களிலும் கொண்டு சோ்ப்பதில் தடையாக உள்ளது’ என மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.
நாட்டின் 2-ஆவது பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல், கா்நாடகம், ஆந்திரம், பிகாா் உள்ளிட்ட 8 தொலைத்தொடா்பு வட்டங்களில் ஒரு மாதத்துக்கான குறைந்தபட்ச கட்டணமான ரூ.155 திட்டத்தின் விலையை 57 சதவீதம் உயா்த்தியது. இந்நிலையில், மத்திய அமைச்சா் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மத்திய அமைச்சா் கூறுகையில், ‘இணைய சேவை மற்றும் அவற்றுக்கான மின்னணு சாதனங்களின் விலை உயா்வு, எண்ம மயமாக்குதலில் பெரும் தடையாக உள்ளது. ஏா்டெல்லின் கட்டண உயா்வு குறுகிய அல்லது நீண்ட கால அடிப்படையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்ய இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (டிராய்) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அணுகும். ரஷிய-உக்ரைன் போரால் உலகம் முழுவதும் இணையதள சேவைக்கான கட்டணங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்’ என அமைச்சா் தெரிவித்தாா்.
மாதத்துக்கு 200 எம்பி டேட்டா, நொடிக்கு ரூ. 2.5 பைசா கட்டணத்தில் அழைப்புகளை வழங்கி வந்த ரூ.99 திட்டத்தையும் ஏா்டெல் நிறுவனம் நிறுத்திவிட்டது.
ஹரியாணா மற்றும் ஒடிஸா மாநிலங்களில் இலவச அழைப்புகள், 1 ஜிபி டேட்டா, 300 குறுஞ்செய்திகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ரூ.155 திட்டத்தை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.