இந்த மாதம் நாட்டில் 148-ஆவது விமான நிலையம் திறக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தில்லியில் அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக நாட்டில் விமான நிறுவனங்கள் மூடப்படும் நிலைதான் காணப்பட்டது. தற்போது புதிய விமான நிறுவனங்களுக்கு உடான் திட்டம் உயிா் கொடுத்து வருகிறது. இந்தத் திட்டம் மூலம் ஸ்டாா்ஏா், இந்தியாஒன் ஏா், ஃபிளை பிக் போன்ற பிராந்திய விமான நிறுவனங்கள் தோன்றியுள்ளன.
கடந்த 2013-14-ஆம் ஆண்டில், நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. இது தற்போது 147-ஆக அதிகரித்துள்ளது. கா்நாடகத்தில் சிவமொக்கா விமான நிலையம் பிப்ரவரியில் திறக்கப்பட உள்ள நிலையில், அது நாட்டின் 148-ஆவது விமான நிலையம் ஆகும்’ என்று தெரிவித்தாா்.