அகமதாபாத்: அகமதாபாத் இஸ்கான் மேம்பாலத்தில் வியாழக்கிழமை அதிகாலை விபத்து நடந்த இடத்தில் வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டத்தின் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மோதியதில் 9 பேர் பலியாகினர், 13 பேர் காயமடைந்தனர்.
சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் பாலத்தில் நள்ளிரவு இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் போலீசாருடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிக்க | என் இதயம் நொறுங்கிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை
அப்போது, எதிர்பாராதவிதமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஜாகுவார் சொகுசு ஒன்று அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடையே வேகமாக புகுந்து மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 13 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் 2 பேர் காவலர்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்தவர்களில் பொடாட் மற்றும் சுரேந்திரநகரைச் சேர்ந்த இளைஞர்களும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.