கிருஷ்ணகிரியில் பட்டாசு கடையில் நடந்த துயரமான விபத்தை நினைத்து வருத்தமுற்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், கிருஷ்ணகிரியில் (தமிழ்நாடு) பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் முதலில் 4 பேர் பலியாகினர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பட்டாசு வெடி விபத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் மேலும் 5 பேர் பலியாகினர். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் ரவி, ஜெய்ஸ்ரீ, ருத்திகா, ருதிஷ், ராஜேஸ்வரி, இப்ராகிம், இம்ரான் ஆகியோர் இறந்துள்ளனர். இருப்பினும் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.