பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைத்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரும் தவறான நடவடிக்கை என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி, ரயில்வேக்கு மீண்டும் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
278 உயிரிழந்த ஒடிஸா ரயில் விபத்து குறித்து பேசிய அவா், ‘நாட்டில் சாதாரண ரயில்களுக்குத் தேவையான நவீனமயம், தொழில்நுட்பமே இல்லாதபோது மத்திய அரசு அதிநவீன புல்லட் ரயில்கள் குறித்துப் பேசுகிறது.
பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டதால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப் பெரிய தவறு.
பயணிகளின் பாதுகாப்பு, நவீனமயமாக்கல் இல்லாமல் அதிவேக ரயில்களை இயக்குவதில் மட்டும் அரசு கவனம் செலுத்துகிறது. ஒடிஸா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்.
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக அத்துறை தேவையான அளவு வருவாயை ஈட்டுவதில்லை. ரயில் பாதுகாப்புக்கு தேவையான தொகையை பொது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்தத் தொகை பயன்பாட்டில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்’ என்றாா்.