மும்பை: இந்தியாவுக்கு மோடி.. மகாராஷ்டிரத்துக்கு ஏக்நாத் ஷிண்டே என்று மகாராஷ்டிர அரசு சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் முழு விளம்பரம்தான் இன்று மிக முக்கிய அரசியல் சார்பு பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த விளம்பரத்தைப் பார்த்த பலரும், ஏக்நாத் ஷிண்டேன் அடுத்த அதிரடி தொடங்கிவிட்டதாகவே கருதுகிறார்கள்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனை- பாஜக கூட்டணி அரசு சார்பில் அளிக்கப்பட்ட முழு பக்க விளம்பரம், மகாராஷ்டிரத்தில் இன்று வெளியான நாளிதழ்களில் அச்சடப்பட்டு வெளியாகியிருக்கிறது.
முதல் பக்கத்தில் வெளியான அந்த விளம்பரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதனுடன், மகாராஷ்டிர மக்கள், முதல்வர் பதவியில், பட்னவீஸை விடவும் ஏக்நாத் ஷிண்டே இருப்பதையே அதிகம் விரும்புவதாகவும் ஒரு ஆய்வு முடிவு என்று தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
அதாவது, தேர்தல் ஆய்வுகளின்படி, 30.2 சதவிகித மகாராஷ்டிர மக்கள் பாஜகவையும், 16.2 சதவிகித மகாராஷ்டிர மக்கள் சிவ சேனையையும் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மகாராஷ்டிரத்தில் ஒட்டுமொத்தமாக 46.4 சதவிகித மக்கள் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கூட்டணியை விரும்புவது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், 26.1 சதவிகித மகாராஷ்டிர மக்கள் முதல்வர் பதவியில் ஏக்நாத் ஷிண்டே இருப்பதை விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், மகாராஷ்டிர மக்களுக்கு ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக இருக்க வேண்டும் என்ற ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனையை இரண்டாக உடைத்து, பாஜகவுடன் சேர்த்து ஆட்சியமைத்த ஏக்நாத் ஷிண்டே, அடுத்து நிரந்தர முதல்வராக இருக்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக பாஜக தரப்பில் விமரிசிக்கப்படுகிறது.
இந்த விளம்பரத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் புகைப்படமும் இடம்பெறாமல் போயிருப்பது அவரது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.