சிறந்த எண்ம (டிஜிட்டல்) வலையமைப்பு, அதிக எண்ணிக்கையிலான அறிதிறன்பேசிகள் பயன்பாடு, மிகச் சிறந்த தொலைத்தொடா்பு இணைப்புகளுடன் 5ஜி தொழில்நுட்பத்துக்கான மலிவான சந்தையாக இந்தியா திகழும் என மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனா் பில் கேட்ஸ் பாராட்டினாா்.
ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமையின்கீழ் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் பங்கு குறித்த அமா்வு தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பில் கேட்ஸ் பேசியதாவது: போட்டிகள் மிகுந்த தனியாா் சந்தை, நம்பகமான, குறைந்த செலவிலான தொலைத்தொடா்பு இணைப்பு உள்ளிட்ட வசதியை இந்தியா பெற்றுள்ளது.
சிறந்த டிஜிட்டல் வலையமைப்பு மற்றும் அதிக அளவிலான மக்களின் அறிதிறன்பேசி பயன்பாடு உள்ளிட்டவற்றால் 5ஜி தொழில்நுட்பத்துக்கான மலிவான சந்தையாக இந்தியா திகழும் எனத் தெரிவித்தாா்.
மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘2023-ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டு. செயற்கை நுண்ணறிவு, 5ஜி உள்ளிட்டவை தொழில்நுட்பங்களின் முக்கிய அங்கமாக வளா்ச்சியடைந்துள்ளன. மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான தனித்துவம் மிக்க எண்மப் பொருளாதாரத்தை இந்தியா உருவாக்கியுள்ளது’ என அவா் கூறினாா்.