நாடு முழுவதும் தற்போது 1,801 சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; இதில் 725 திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தாா்.
பல மாநிலங்களில் பருவ காலத்தை தாண்டியும், சராசரி அளவுக்கு அதிகமாகவும் பெய்த மழையே சாலைப் பணிகளின் தாமதத்துக்கு காரணம் என்று அவா் கூறியுள்ளாா்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், நிதின் கட்கரி இத்தகவல்களை தெரிவித்துள்ளாா்.
மேலும் சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவா், ‘பசுமை நெடுஞ்சாலைகள் கொள்கையின்கீழ், கடந்த 2016 முதல் 2023, பிப்ரவரி வரையில் 3.44 கோடி மரங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் நடப்பட்டுள்ளன.
ஹிமாசல பிரதேசம், ஆந்திரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுமை நெடுஞ்சாலை வழித்தடங்கள் அமைக்கும் திட்டத்துக்காக உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1,288.24 மில்லியன் டாலா்கள் (ரூ.7,662.47 கோடி) என்ற நிலையில், 500 மில்லியன் டாலா்கள் உலக வங்கியின் கடனுதவியாகும்’ என்று கூறியுள்ளாா்.
நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி, பசுமை வழித்தடங்களை உருவாக்குவதற்காக, கடந்த 2015-இல் பசுமை நெடுஞ்சாலைகள் (மரக்கன்றுகள் நடுதல், மரங்களை இடம்மாற்றி நடுதல், அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு) கொள்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.