தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலமான சுங்கக் கட்டண வசூல் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி ரூ. 193.15 கோடி வசூலானதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து என்ஹெச்ஏஐ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், ‘ஃபாஸ்டேக்’ என்ற முறையைப் பயன்படுத்தி ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தின் தானியங்கி இயந்திரம் மூலம் தாமாக கட்டணத்தை வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கா் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திராமல் பயணத்தைத் தொடர முடியும்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இதுவரை இல்லாத அளவில் ஃபாஸ்டேக் மூலமாக ரூ. 193.15 கோடி ஒரு நாள் சுங்கக் கட்டண வசூல் செய்யப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் 50-க்கும் அதிகமான நகரங்களில் 140-க்கும் அதிகமான வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் கனரக சரக்கு வாகனங்களுக்கான நிறுத்துமிட கட்டணமும் ஃபாஸ்டேக் மூலமாக வசூலிக்கப்படுகிறது.
சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், ‘ஜிஎன்எஸ்எஸ்’ என்ற செயற்கைக்கோள் கண்காணிப்பு நடைமுறை அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன என்று என்ஹெச்ஏஐ தெரிவித்துள்ளது.