மும்பையில் வளர்ப்பு நாயை குளிக்க வைத்தபோது ஏரியில் மூழ்கி அண்ணனும், தங்கையும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், டோம்பிவிலியில் உள்ள தாவடி ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ரஞ்சித் ரவீந்திரன்(23), அவரது சகோதரி கீர்த்தி(17) ஆகியோர் தங்களது வளர்ப்பு நாயை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கீர்த்தி கால் தவறி ஏரியில் விழுந்து மூழ்கத் தொடங்கினார்.
உடனே தனது தங்கையை காப்பாற்ற ரஞ்சித்தும் நீரில் குதித்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர். தாவடி ஏரிக்கு வெளியே நாய் மற்றும் ஸ்கூட்டர் இருப்பதைக் கண்ட அப்பகுதியினர் மண்பாடா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணனும், தங்கையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்கள் ஸ்கூட்டரில் டோம்பிவிலி அருகே உள்ள தாவடி ஏரிக்கு நாயை குளிப்பதற்கு அழைத்துச் செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.