காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் தங்களது மனக் கட்டுப்பாட்டை இழந்து பேசி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடக பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு பேசியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: உலக நாடுகள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகிறது. இதுபோன்ற விமர்சனங்களைக் கொண்டு மக்களை தூண்டிவிட முடியாது. நீங்கள் பிரதமர் மீது எந்த அளவுக்கு வெறுப்புணர்வைக் காட்டுகிறீர்களோ அந்த அளவுக்கு அவருக்கான ஆதரவு மக்கள் மத்தியில் உயரும். பல விஷயங்களில் காங்கிரஸிடம் குறை உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை பிரதமர் மோடி உயரச் செய்துள்ளார். அவர் இந்தியாவை செழிப்பான நாடாக மாற்ற உழைத்து வருகிறார். நாட்டின் உள்கட்டமைப்பை அவர் வலிமைப் படுத்தியுள்ளார். அவர் இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளார். உலகில் எங்கு சென்றாலும் மக்கள் மோடி மோடி என்ற முழக்கங்களை எழுப்பி அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.
நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். பிரதமர் மோடியினை விஷப் பாம்பு எனக் கூறியவர்களை நீங்கள் தேர்தலில் வெற்றியடையச் செய்யப் போகிறீர்களா? இதே காங்கிரஸின் சோனியா காந்தி, பிரதமரை மரணத்தின் வியாபாரி என்று விமர்சித்தார். பிரியங்கா காந்தி கீழ் சாதி மக்கள் என விமர்சித்தார். தற்போது பிரதமர் மோடி விஷப் பாம்பு என விமர்சிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தங்களது மனதின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர். பிரதமரை நீங்கள் எவ்வளவு இழிவுபடுத்தினாலும் தாமரை மலரும். பிரதமரை நீங்கள் இழிவுபடுத்தினால் மக்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு அதிகமாகும் என்றார்.