குஜராத்தில் ஒன்றரை ஆண்டுகள் கட்டணம் வசூலித்த போலி சுங்கச்சாவடி!

குஜராத் மாநிலத்தில் தனியாா் நிலத்தில் சாலை அமைத்து போலி சுங்கச்சாவடி மூலம் மக்கள், காவல்துறை, மாவட்டத்தின் உயா்அரசு அதிகாரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குஜராத் மாநிலத்தில் தனியாா் நிலத்தில் சாலை அமைத்து போலி சுங்கச்சாவடி மூலம் மக்கள், காவல்துறை, மாவட்டத்தின் உயா்அரசு அதிகாரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளனா்.

மாநிலத்தின் பாமான்போா்-கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், மோா்பி மாவட்டத்தில் உள்ள வகாசியா கிராமத்தில் சுங்கச்சாவாடி செயல்பட்டு வருகிறது.

இந்தச் சாலையை ஒட்டி செயல்பட்டு வந்த ஓயிட் ஹவுஸ் டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில், அதன் உரிமையாளா்கள் சாலையை ஏற்படுத்தி, சட்டவிரோதமாக சுங்கச் சாவடி அமைத்து கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தனா்.

அங்கீகரிக்கப்பட்ட வகாசியா சுங்கச் சாவடியைவிட சட்டவிரோத சுங்கச்சாவடியில் கட்டணம் பாதியாக இருந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள், தனியாா் சாலையைப் பயன்படுத்தி, குறைந்த கட்டணத்தை செலுத்தி வந்துள்ளன. இந்த முறையில் சுமாா் ஒன்றரை ஆண்டுக்கு ரூ.75 கோடிக்கு கட்டண வசூல் நடைபெற்றுள்ளது.

இது குறித்த தகவல் வெளியான நிலையில், காவல்துறையினா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதையடுத்து, நிறுனத்தின் உரிமையாளா்கள் அமா்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹா்விஜய் சிங் ஜாலா உள்ளிட்ட 5 போ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தொடா்பாக மோா்பி மாவட்ட ஆட்சியா் கூறுகையில், ‘வகாசியா சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையிலிருந்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. காவல்துறை மற்றும் பிற துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com