உத்தரப் பிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்களைத் திறக்க அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காசியாபாத், ரேபரேலி, சீதாப்பூர், ஹர்தோய், கான்பூர், தேஹாத், எட்டாவா, பாக்பத், பாரபங்கி, மைன்புரி மற்றும் ராம்பூர் உள்ளிட்ட மாநிலத்தில் 57 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்களை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சைபர் கிரைம் காவல் நிலையங்களை அமைப்பதற்கு ரூ.127.24 கோடி செலவாகும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த காவல் நிலையங்கள் விரைவில் நிறுவப்பட்டு சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறிய அமைச்சர், மாநிலத்தில் இதுவரை 18 மாவட்டங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சைபர் கிரைம் காவல் நிலையங்கள் இனி காவல்துறை கண்காணிப்பாளர்களின் கீழ் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.