பாஜக: கேரளத்தில் மீண்டும் தொடங்கும் ‘ஸ்னேக யாத்திரை’
கொச்சி: நாட்டில் மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் பாஜக கட்சி ‘ஸ்னேக யாத்திரை’ என்கிற பெயரில் முன்னெடுப்பு ஒன்றை மீண்டும் தொடங்கியுள்ளது. கிறிஸ்துவ சமுதாயத்தை இலக்காக கொண்டு இந்தத் திட்டத்தை பாஜக கட்சி ஆண்டின் தொடக்கத்தில் ஈஸ்டர் திருவிழாவையொட்டி அறிவித்தது.
மேலும், பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஸ்னேக யாத்திரையை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் கே சுரேந்திரன், கார்டினல் ஜியார்ஜ் ஆலஞ்சேரியைச் சந்தித்து பிரதமர் மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்னும் சில கிறிஸ்துவ மதகுருக்களையும் சந்தித்து பிரதமரின் வாழ்த்துகளை பாஜக தலைவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சபரிமலை விமான நிலையம்: நிலத்தைக் கையகப்படுத்த அரசு உத்தரவு!
இது குறித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் சுரேந்திரன். மணிப்பூர் விவகாரத்தில் பாஜகவுக்கும் கிறிஸ்துவ மதாலயங்களுக்கும் இடையேயான மோதல் என்பது சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது. பாஜகவுக்கும் மதாலயத்துக்குமிடையே எப்போதும் நல்லுறவே நீடிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.