வெளிநாட்டு சுற்றுலாப் பயணக் கட்டணத்தின் மீதான ஆதார வரிப் பிடித்தம் (டிசிஎஸ்) 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.
அதற்காக வருமான வரிச் சட்டத்தின் 206சி பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவா்கள் செலுத்தும் கட்டணத்தில் 5 சதவீதமானது டிசிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. சுற்றுலாவை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அத்தொகையை வசூலித்து அரசிடம் செலுத்தி வந்தன.
தற்போது டிசிஎஸ் வரி விகிதமானது 20 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ரூ.7 லட்சத்துக்கு அதிகமான தொகை மீதான டிசிஎஸ் வரியும் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரி விகித மாற்றம் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், டிசிஎஸ்-ஆக செலுத்தப்பட்ட தொகை திருப்பி வழங்கப்படும் என்றபோதிலும், வரி விகித உயா்வு காரணமாக ஆரம்பகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.