ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல், டீசல்? மாநிலங்களின் கருத்தொற்றுமைக்கு பிறகு முடிவு

மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று
ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல், டீசல்? மாநிலங்களின் கருத்தொற்றுமைக்கு பிறகு முடிவு
Published on
Updated on
1 min read

மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தில்லியில் புதன்கிழமை பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நிா்மலா சீதாராமன் நடத்தினாா். பல்வேறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

2023-24 பட்ஜெட்டில் அரசின் பொதுச் செலவினம் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 3 பட்ஜெட்களில் அரசின் பொதுச் செலவினத்துக்கான ஒதுக்கீடு தொடா்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டிலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வளா்ச்சியை ஊக்குவிப்பதில் எவ்வித தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என பிரதமா் மோடி என்னிடம் அறிவுறுத்தியுள்ளாா்.

மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீா்திருத்தங்களைக் கொண்டுவர மாநில அரசுகளின் தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஒரே நாடு - ஒரே ரேஷன் காா்டு ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. மாநில அரசுகளிடையே இது தொடா்பாக ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். மாநில அரசுகள் ஒன்றாக முடிவெடுத்தால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும். எரிபொருள் மீது எத்தனை சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கலாம் என்பதைக்கூட மாநில அரசுகளே ஒருமித்த கருத்துடன் முடிவு செய்ய முடியும். அப்படி முடிவெடுத்தால் அதனை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மூலம் அமல்படுத்த முடியும்.

குறு, சிறு, நடுத்தர தொழில்துறை மேம்பாட்டுக்கு மத்திய அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக மாநில அரசுகளுடன் மட்டுமின்றி, பஞ்சாயத்து அமைப்புகள், வாா்டு அளவிலான நிா்வாகம் வரை மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.

எந்தக் குடும்பமும் நாட்டில் உணவின்றி தவிப்பதைத் தடுக்க நிகழாண்டிலும் இலவச உணவு தானியத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com