உத்தர பிரதேசத்தில் 25 கோடி மக்களில் 14 கோடி பேர் இலவச ரேஷன் பெறுகிறார்கள் என்று அம்மாநில அமைச்சர் லக்ஷ்மிநாராயண் சௌத்ரி தெரிவித்தார்.
உ.பி. பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மிநாராயண் சௌத்ரி, மாநிலத்தில் உள்ள 25 கோடி மக்களில் 14 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், பிப்ரவரி 13 ஆம் தேதி வரை மாநிலத்தில் மொத்தம் 1,75,02,198 இலவச எரிவாயு இணைப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் அத்திட்டத்தின் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு 39 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது என்றார்.
உத்தர பிரதேசத்தில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 2025-இல் நடைபெறும் மகா கும்ப மேளாவின் முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ.2,500 கோடியை உத்தர பிரதேச மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.