விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபர்! ஏர் இந்தியா நடவடிக்கை!
ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபர், 30 நாள்களுக்கு விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
தில்லியிலிருந்து நியூயார்க் சென்ற ஏர்இந்தியா விமானத்தில், நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண், ஏர்இந்தியா குழுமத் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணியான மூதாட்டி மீது நபர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மூதாட்டி மீது சிறுநீர் கழித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விமானத்தில் பயணிக்க அனுமதியற்றவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியிலிருந்து நியூ யார்க் நகரத்துக்கு கடந்த நவம்பர் 26ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் பயணித்துள்ளது. இதில் முதல் வகுப்பில் பயணித்த மூதாட்டி மீது நபர் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இரவு உணவுக்குப் பிறகு விளக்குகளின் வெளிச்சம் குறைக்கப்பட்டபோது அவர் இதனைச் செய்துள்ளார்.
அருகில் இருந்த பயணிகள் அவரை நகர்ந்து செல்ல வலியுறுத்தியும், அவர் மறுத்துள்ளார். மூதாட்டியின் உடை, கையடக்கைப் பை, காலணிகள் முழுக்க நனைந்துள்ளது. இது குறித்து உடன் பயணித்தவர்களிடன் மூதாட்டி புகாரளித்துள்ளார். இதனையடுத்து மூதாட்டிக்கு போர்வை, மாற்று காலணிகள் கொடுத்து அவரின் இருக்கைக்கு அனுப்பியுள்ளனர். விமானத்தில் வேறு இருக்கைகள் இல்லாததால், சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கையிலேயே மூதாட்டி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகருக்கு மூதாட்டி கடிதம் மூலம் நடந்ததை விவரித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், தாமதித்தவர்களையும் கண்டிப்பதாகவும் ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.