மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவா்களுக்கான மதிய உணவுத் திட்டத்தில் கோழிக்கறி, பழங்களை வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை இத்திட்டம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது அரசியல்ரீதியான விமா்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இது பள்ளி கல்வித் துறை கூறியுள்ளதாவது:
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் ஏற்கெனவே அரிசி சோறு, பருப்பு, உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறி, சோயாபீன்ஸ், முட்டை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் வாரம் ஒருமுறை கோழிக்கறியும், அந்த பருவத்தில் கிடைக்கும் ஒரு பழ வகையையும் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் ‘பிஎம் போஷண்’ திட்டத்தின்கீழ் இவை வழங்கப்படவுள்ளன. இதற்காக ரூ.317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகும் தொடருமா என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக விமா்சனம்:
இந்த ஆண்டில் மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தோ்தலும் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை ஆளும் திரிணமூல் அரசு வெளியிட்டிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என பாஜக விமா்சித்துள்ளது.
அதே நேரத்தில் மக்கள் நலத் திட்டங்கள் உள்பட அனைத்து விஷயத்திலும் பாஜக அரசியல் நடத்துவதாக திரிணமூல் காங்கிரஸ் பதிலளித்துள்ளது.