பிகாரைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பல மாநிலங்களில் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மத்திய அரசுக்குப் பலமுறை கோரிக்கைகள் விடுத்தாா். ஆனால், மத்திய அரசு அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. பட்டியலினத்தோா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) தவிர இதர பிரிவினா் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. இதனிடையே, பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளை மாநில அரசு அண்மையில் தொடக்கியுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து முதல்வா் நிதீஷ் குமாா் கூறுகையில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில மக்கள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் இருக்கும்’ என்றாா். இந்த நிலையில் பிகாரைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை எழுந்துள்ளது. பிகார் முதல்வர் நிதீஷ்குமாரின் இந்த முடிவை வரவேற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
இதையும் படிக்க- மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த்
இதுகுறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது, மகாராஷ்டிரா பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை எழுப்பிய முதல் நபர் நான்தான் என்றார். மேலும் தான் பேரவைத் தலைவராக இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக ஒருவரித் தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் நாங்கள் ஆட்சியில் இருந்து வெளியேறினோம்.
இத்தகைய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள புதிய அரசு தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. மகாராஷ்டிரா அரசு பிகார் அரசைப் பின்பற்றி கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று படோலே கூறினார்.