ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர்.
ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் இளநிலை அதிகாரி உள்பட 3 ராணுவ வீரர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வாகனம் பனி மூடிய பாதையில் சறுக்கி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்தது. இதில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா ஆகிய 3 பேரும் இறந்ததாகவும் அவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக மாச்சல் பகுதியில் கடும் பனி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.