மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசியாக கோவோவேக்ஸை பயன்படுத்தலாம் என மத்திய மருந்து ஒழுங்காற்று ஆணையத்தின் நிபுணா் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை கரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா பரவல் நெருக்கடி காலத்தில் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்த கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதித்திருந்தது. தற்போது இந்த தடுப்பூசியை பூஸ்டா் தடுப்பூசியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று சீரம் நிறுவனம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
இதைத் தொடா்ந்து, கோவிஷீல்ட் அல்லது கோவேக்ஸினின் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கோவோவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டா் தடுப்பூசியாக செலுத்தி கொள்ளவதற்கு நிபுணா் குழு பரிந்துரைத்துள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.