வட இந்தியாவில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான குளிருக்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலின்படி,
கடந்த மாதம் தெற்கு ஹரியாணா, கிழக்கு ராஜஸ்தான், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான குளிர் மக்களை வாட்டி வதைத்தது.
வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும், ஹரியாணா மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் பதிவாகினது.
இந்நிலையில், அடுத்த ஐந்து நாள்களுக்கு வட இந்தியாவில் அதிகப்படியான குளிர் அலை வீசுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 20 முதல் 22 வரை ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சல் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும்.
ஜனவரி 23 முதல் ஜனவரி 25, 26 வரை பஞ்சாப், ஹரியாணா, தில்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மலைகளில் இருந்து குளிர்ந்த வடமேற்கு காற்று வீசுவது குறைந்து, வெப்பநிலை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.