ராகுலின் நடைப்பயணத்தில் சஞ்சய் ரௌத் மேலும் நடந்தால் என்ன ஆகும் தெரியுமா? பாஜக கிண்டல்
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரௌத் தொடர்ந்து நடந்தால் உத்தவ் தாக்கரேவின் அனைத்து வெற்றிக் கதவுகளும் அடைக்கப்படும் என பாஜக கிண்டலாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரில் தொடர்கிறது. ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரௌத் நேற்று (ஜனவரி 19) கலந்து கொண்டார். நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அவர், சிவசேனை கட்சியின் சார்பாக நான் இந்த ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொள்கிறேன்.நாட்டின் நிலை வேகமாக மாறி வருவதைப் பார்க்க முடிகிறது. மிக முக்கியப் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் தலைவராக ராகுல் காந்தி இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது எனப் பேசினார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரௌத் தொடர்ந்து நடந்தால் உத்தவ் தாக்கரேவின் அனைத்து வெற்றிக் கதவுகளும் அடைக்கப்படும் என பாஜக கிண்டலாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தரப்பில் கூறியதாவது: சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் ரௌத் ராகுல் காந்தியுடன் பயமின்றி நடக்க வேண்டும். அவர் எவ்வளவு தூரம் ராகுல் காந்தியுடன் தொடர்ந்து நடக்கிறாரோ அதற்கேற்ப உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியின் வெற்றிக் கதவுகள் அடைக்கப்படும் என்றனர்.