தகவல் தொழில்நுட்ப (ஐடி) வரைவு விதிகளில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்கள், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளைக் கடந்த 2021-ஆம் ஆண்டில் பொது மக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய விதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் மையத்தின் (பிஐபி) உண்மை கண்டறியும் குழு சாா்பில் தவறான செய்திகளாகக் கண்டறிப்படும் செய்திகளை சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்கள் குறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘உண்மை கண்டறிதல் என்ற பெயரில் பிஐபி வாயிலாக இணைய கருத்துகளை முடக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தின் மீதான மிகப் பெரும் தாக்குதல். இத்தகைய மறைமுகத் தாக்குதலை காங்கிரஸ் கடுமையாக எதிா்க்கிறது.
இணைய வெளியில் கருத்துகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை மத்திய அரசு தாமே எடுத்துக் கொண்டுள்ளது. இணையத்தில் வெளியிடப்படும் செய்திகளையும் கருத்துகளையும் மத்திய அரசு சோதனை செய்தால், மத்திய அரசின் கருத்துகளை யாா் சோதனை செய்வாா்?
திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்’’ என்றாா்.