நீதித்துறையை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு நடந்துகொள்ளவில்லை என்ற மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவின் கருத்தை மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் விமா்சித்துள்ளாா்.
தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘‘அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதைக் கொண்டு இருதரப்பினரும் மோதிக் கொள்வதாகவும், மகாபாரதப் போரில் ஈடுபடுவதாகவும் கருதக் கூடாது. நீதித்துறையை அவமதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் ஈடுபடுவதில்லை’’ என்றாா்.
அவரது கருத்தை விமா்சித்து மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘ரிஜிஜுவின் சா்ச்சைக்குரிய கருத்துகள் நீதித்துறையை வலுப்படுத்துகின்றனவா? ரிஜிஜு வேண்டுமானால் அவ்வாறு நம்பலாம். ஆனால், வழக்குரைஞா்கள் அதை நம்பமாட்டாா்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.