அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான விளம்பரங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், ராஜஸ்தான் அரசு ஒரு அதிரடி திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ராஜஸ்தான் அரசு, யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், 10 ஆயிரம் ஃபாலோயர்களுக்கு மேல் இருக்கும் இளைஞர்களுக்கு, அரசின் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது.
இதற்காக, லட்சக்கணக்கில் ஃபாலோயர்களைக் கொண்ட சமூக ஊடகவியலாளர்களை நேரில் அழைத்து, தங்களது பக்கங்களில், அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் அரசு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், ஃபாலோயர்களை அடிப்படையாக வத்து சமூக ஊடகவியலாளர்கள் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என்பது தெளிவாகிறது.
சமூக ஊடகங்கள் வாயிலாக பணமின்றி விளம்பரங்களைக் கொடுக்க மத்திய அரசு முன்வந்திருப்பது பல்வேறு விமரிசனங்களை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், இளைஞர்களின் வருவாயை பெருக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த அறிக்கையின்படி, 10 ஆயிரத்துக்கும் மேல் ஃபாலோயர்களைக் கொண்ட அனைவருக்கும் ராஜஸ்தான் அரசின் விளம்பரங்கள் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
அதன்படி, 10 லட்சத்துக்கும் மேல் ஃபாலோயர்களைக் கொண்டவர்கள் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த விளம்பர விடியோ மக்களை சென்றடையும் விகிதத்தை அடிப்படையாக வைத்தே பணம் வழங்கப்படும் என்றும், அதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்கி வருகிறது ராஜஸ்தான் அரசு.