ஜிஎஸ்டியை அமலாக்கத் துறையுடன் சேர்ந்திருப்பதால் வரி செலுத்தும் வணிகர்களும் கைது செய்யப்படலாம் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேஜரிவாலின் சுட்டுரை பதிவில்,
ஜிஎஸ்டி நெட்வொர்க்குடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அமலாக்கத்துறை அனுமதித்த நிலையில், பணமோசடி சட்டத்தின் விதிகளை அரசு திருத்தியுள்ளது. பணமோசடி மூலம் தவிர்க்கப்பட்ட ஜிஎஸ்டியை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை மேற்கொண்டது.
வணிகர்களின் பெரும் பகுதியினர் ஜிஎஸ்டியை செலுத்துவதில்லை. சிலர் கட்டாயத்தின் பேரில் செலுத்தி வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், ஒரு தொழிலதிபர் ஜிஎஸ்டியை சரியாக செலுத்தவில்லை என்றால், அவர் அமலாக்கத்துறையால் நேரடியாக கைது செய்யப்படுவர். அவருக்கு ஜாமீன் வழங்கப்படாது.
ஜிஎஸ்டிஎன் மறைமுக வரி ஆட்சியின் தொழில்நுட்ப முதுகெலும்பைக் கையாளுகிறது. வருமானம், வரி தாக்கல் மற்றும் பிற இணக்கங்கள் உள்பட அனைத்து ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களுக்கும் களஞ்சியமாக உள்ளது.
பணமோசடி தடுப்பு சட்டம்(பி.எம்.எல்.ஏ), 2002-இன் விதிமுறைகளின் திருத்தத்தின்படி, அமலாக்கத்துறை தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நிறுவனங்களின் பட்டியலில் ஜி.எஸ்.டி.என் சேர்க்கப்பட்டுள்ளது.
இது மிகவும் சிக்கலானது. ஜிஎஸ்டியுடன் அமலாக்கத்துறை சேர்த்திருப்பதால் சரியாக வரி செலுத்துபவர்களும்கூட கைது செய்யப்படலாம். மத்திய அரசு விரும்பும் போதெல்லாம் எந்ததொரு தொழிலதிபரையும் சிறைக்கு அனுப்பலாம். இது மிகவும் ஆபத்தானது என குற்றம் சாட்டியுள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் கேஜரிவால் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.